;
Athirady Tamil News

நான் நிரபராதி… சிறைக்குப் புறப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

0

தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியா சர்வாதிகாரியான முஅம்மர் கடாபியிடம் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சார்க்கோஸி சிறைக்குப் புறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள்
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.

சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறைக்குப் புறப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
இந்நிலையில், சார்க்கோஸி சிறைக்குப் புறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தன் மனைவியின் கையைப் பிடித்தவண்ணம் தனது வீட்டிலிருந்து சார்க்கோஸி வெளியே வர, வாசலில் காத்திருந்த அதிகாரிகள் அவரை காரில் ஏற்றிக்கொண்டு சிறைக்குப் புறப்பட்டுள்ளார்கள்.

சோகமே உருவாக சிறைக்குப் புறப்பட்ட சார்க்கோஸி, தன் வீட்டின் முன்னே கூடியிருந்த தன் ஆதரவாளர்களிடம், ஒரு நிரபராதி சிறை செல்கிறார் என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, சார்க்கோஸியை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கார், பாரீஸில் அமைந்துள்ள Prison de la Sante என்னும் சிறையை வந்தடையும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சார்க்கோஸி அடைக்கப்பட இருக்கும் Prison de la Sante சிறை, சரியான வசதிகள் இல்லாத, மோசமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பயங்கரமான சிறை ஆகும்.

அங்கு, சார்க்கோஸி தனி அறையில், அதாவது, தனிமைச் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.