;
Athirady Tamil News

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

0

நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) உள்பட 9 கட்சிகளை ஒன்றிணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஆட்சியாளர்களின் ஊழலை எதிர்த்து ஜென்-ஸி இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜிநாமா செய்தார்.

மேலும், அவர் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நேபாள பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில், அந்நாட்டில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மையம்), ஒருங்கிணைந்த சோசலிஸ்ட், மஹிந்திரா ராயா யாதவ் தலைமையிலான நேபாள சமாஜ்வாதி கட்சி, ராஜு கார்க்கியின் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்), சுபாஷ் ராஜ் கஃப்லேவின் ஜன சமாஜ்வாதி கட்சி, சிரான் புனின் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்), கர்ணஜித் புத்ததோகியின் மாவோயிஸ்ட் சோசலிஸ்ட், பிரேம் பகதூர் சிங்கின் நேபாள கம்யூனிஸ்ட் (கம்யூனிஸ்ட்) மற்றும் கோபால் கிராதியின் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒன்றிணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 9 கட்சிகளையும் இணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவரும் முன்னாள் பிரதமருமான பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மாதவ் குமார் நேபாளம் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.