போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், கடந்த நவ.19 ஆம் தேதி முதல் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதையடுத்து, நேற்று (நவ. 20) காலை இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்மூலம், கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் காஸா அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது கடந்த அக்.10 ஆம் தேதிக்குப் பிறகு காஸா மீது நடத்தப்பட்ட மிகவும் பயங்கரமான தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கான் யூனிஸ் பகுதியில் உள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால், வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறியுள்ளது. ஆனால், அப்பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையிலான போரில் 69,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில், கடந்த அக்.10 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.