இந்தோனேசியா வெள்ளம்! 1000-ஐ கடந்த உயிர்ப் பலிகள்; 218 பேர் மாயம்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சும்தரா தீவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அங்குள்ள 3 மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில், அங்குள்ள கட்டுமானங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000-க்கும் அதிகமான மக்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 218 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, சுமத்ராவின் 3 மாகாணங்களில் மட்டும் 1,200 பொது கட்டமைப்புகள், 219 சுகாதார கட்டமைப்புகள், 581 கல்வி கட்டடங்கள், 434 வழிபாட்டுத் தலங்கள், 290 அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 145 பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், சுமத்ராவின் ஆச்சே மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் (டிச. 12) ஆய்வு செய்த இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ, மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு உதவும் எனவும், விரைவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக, இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, வியத்நாம், மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் பெய்த கனமழையால் அங்கு கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.