தனுஷ்கோடியில் உருவான மணல் திட்டில் குவிந்த கடல் புறாக்கள்
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையானது, 2 கடல்கள் சங்கமிக்கும் இடமாகும். இதில் தென்கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன.
அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று பார்த்தாலே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலின் நடுவே அந்த மணல் திட்டுகள் தெளிவாக தெரிகின்றன. இந்த மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் காவா என்று சொல்லக்கூடிய கடல் புறாக்கள் குவிந்துள்ளன. கடலின் மேற்பரப்பில் கூட்டமாக ஒரே நேரத்தில் பறந்துவிட்டு, மீண்டும் மணல் திட்டுகளில் ஒரே நேரத்தில் அமர்ந்து இளைப்பாறுகின்றன. இதை சாலையில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.