பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!
தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களைத் தேடும் பணியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போலீஸாரும் ஈடுபட்டனர்.
அப்போது, 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் தெஹ்ரீக்-இ-ரெஹ்மான் இயக்க தளபதி டேனிஷ், ஜராரி குழுவைச் சேர்ந்த அபு சாலே டாவர் ஜராரி மற்றும் அதா-உர்-ரெஹ்மான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடைசி பயங்கரவாதி பிடிபடும் வரை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீஸாரின் கூட்டு தேடுதல் வேட்டை தொடரும் என்று காவல்துறை உயரதிகாரி பன்னு யாசிர் அப்ரிதி திங்கள்கிழமை(டிச. 15) தெரிவித்தார்.