;
Athirady Tamil News

ஈரான் – அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு – கத்தார் எச்சரிக்கை!

0

வளைகுடா பிராந்தியத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் :

ஈரான் – அமெரிக்கா மோதலால் வளைகுடா பிராந்தியத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்து 2-ஆவது வாரத்தை எட்டியுள்ளது.

இந்தச் சூழலில், போராட்டக்காரா்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா். ஈரானின் தற்போதைய பிரச்னைக்கு ராணுவரீதியில் தலையிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிரம்ப் கூறினாா். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஈரான் தலைமை, அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இது குறித்து கத்தார் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மஜெத் அல்-அன்சாரி செய்தியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை(ஜன. 13) பேசுகையில், “எந்தவொரு போர்ப்பதற்ற நடவடிக்கைகளும் இப்பிராந்தியத்தில் மோசமான முடிவுகளையே தரும். ஆகவே, இதனை எந்தளவுக்கு தவிர்க்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் தவிர்க்க வேண்டும்.

தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு எட்ட அனைத்து தரப்பிடமும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக எங்களது அண்டை நாடுகள் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள நட்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.