;
Athirady Tamil News

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

0

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தைப் பொங்கல் திருநாளான வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தை முதல் நாளான பொங்கலன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான இறுதிக் கட்டப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிகழாண்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகள் எல்.இ.டி. திரையில் வெளியிடப்பட உள்ளது. இதில் காளைகளைப் பிடித்த வீரர்களின் விவரங்கள் வெளியிடப்படும்.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் அதிகமான காளைகளை களமிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.