தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அவரே கொடுத்த விளக்கம்
தவெகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்?
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அந்த கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன்.
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும், நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் பேசிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில வாரங்களில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்து கொண்டார்.
தவெகவில் அரசியல் அனுபவமிக்க தலைவர்கள் இல்லாத நிலையில், மூத்த அரசியவாதியான செங்கோட்டையன் கட்சியில் இணைந்த உடன் அவருக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
அதன் பின்னர், ஈரோட்டில் விஜய் உரையாற்றிய பிரம்மாண்ட தவெக மாநாட்டை நடத்தினார் செங்கோட்டையன்.
இந்த நிலையில், மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கட்சியில் உரிய மரியாதை இல்லை எனவும், அதனால் அதிருப்தியில் உள்ள அவர் தேர்தலுக்கு முன்னதாக தவெகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.இந்த தகவலை முற்றிலும் மறுத்த செங்கோட்டையன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர்.
அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது.
மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்.
நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.