தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியால் சட்டவிரோத இறைச்சியுடன் பண்ணையில் ஒருவர் கைது
புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் காளி கோவில் சுற்றாடலை அண்மித்த பற்றைக்காட்டுப் பகுதிக்குள் வைத்து வளர்ப்பு மாடு ஒன்றை திருடி இறைச்சி ஆக்கி யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் காணப்படுகின்ற ஹோட்டல் ஒன்றுக்கு வழங்குவதற்காக புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் பயணித்தவாறு சுமார் 25 கிலோகிராம் எடையுள்ள மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற ஊர்காவற்துறை சின்னமடு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற குணசிங்கம் விஜிதரன் என்பவர் யாழ் பண்ணைப் பாலத்தில் வைத்து இன்று காலை எட்டு மணியளவில் யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு ( DCDB) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தீவகம் சிவில் சமூகம் ( Island’s Civil Society) உறுப்பினர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த நபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இவரோடு இணைந்து குறித்த மாட்டினை இறைச்சியாக்கிய புங்குடுதீவு நான்காம் வட்டாரம் நுணுக்கல் பிரதேசத்தினை சேர்ந்த கோழி என்றழைக்கப்படுகின்ற பிரான்சிஸ் என்கின்ற நபரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட குணசிங்கம் விஜிதரன் என்கிற நபர் இதற்கு முன்பும் பல தடவைகள் சட்டவிரோத மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டவரென்றும் கடந்த வருடம் புங்குடுதீவு பிரதேசத்தில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு சில மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் குறித்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
