;
Athirady Tamil News

2 கோடி 30 இலட்சம்  ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா , மருமகன்  கைது

0
video link-
2 கோடி 30 இலட்சம்  ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில்   வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில்   கைதான  49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரது வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள  இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சோதனை நடவடிக்கையானது  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  ஆலோசனையின் பிரகாரம்    ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான  என். றிபாய்டீன் தலைமையிலான  பொலிஸ் குழுவினரால் இரு வேறு சந்தர்ப்பங்களில்  மேற்கொள்ளப்பட்டு  பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன்  மாமா மற்றும் மருமகன் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த  இரு சந்தேக நபர்கள் வசமிருந்து  குஷ் , கேரளா கஞ்சா,  ஐஸ் , ஹெரோயின்,  உட்பட பல  வகையான போதைப் பொருட்கள் தொலைபேசிகள்  ஒரு தொகை பணம்   என்பன   மீட்கப்பட்டிருந்தன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது  இரு வீடுகளிலும் அதிகளவான சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.

இந் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும்  மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாமா மற்றும் மருமகன்  உறவு முறை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

47 வயது 68 வயது மதிக்கத்தக்க  இவ்விரு சந்தேக நபர்களும் சம்மாந்துறை பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை வியாபாரம் செய்துள்ளதுடன் விநியோகம் செய்தும் வந்துள்ளமை விசாரணைணயில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் பெறுமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமையை தொடர்ந்து கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி உட்பட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆகியோர் சம்மாந்துறை  பொலிஸ் நிலையத்திற்கு சென்று இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான  என். றிபாய்டீன் தலைமையிலான  பொலிஸ்  உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன் போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் குறித்தும் ஆலோசனை வழங்கினர்

மேலும் கைதான பிரதான சந்தேக நபர்களையும்   இன்று(30) சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த   பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது தவிர பெரிய நீலாவணை பொலிஸாரின் கொழும்பு–கல்முனை பஸ்ஸின் அதிரடியான சோதனை நடவடிக்கை காரணமாக   சம்மாந்துறை வரையான கைது நடவடிக்கை சம்மாந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு போதைப்பொருள் வலையமைப்பு பிடிக்கப்பட்டு பல்வேறு வகையிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.