;
Athirady Tamil News

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

0

பன்னாட்டு நிறுவனங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளை நன்கு ஆராயும்போது, ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு எனும் ‘ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் (ஏஐ)’ தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால், பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலையிழக்கும் அபாயகரச் சூழல் பணிச்சந்தையில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஆனால், உண்மையில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியே ஊழியர்களின் பணிநீக்கத்துக்கான முக்கிய காரணமா? என்பதைப் பற்றி, இவ்விவகாரம் குறித்து நன்கறிந்த நிபுணர்கள் தெளிவாக்கியுள்ளனர்.

அமேசான் நிறுவனத்திலிருந்து சுமார் 16,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதே, அண்மைக்கால அதிர்ச்சி செய்தி! அப்படி, அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள ஊழியரொருவர் தெரிவித்த கருத்துகளைப் பார்ப்போம்.

“ஒரு நிறுவனத்தில் ஊழியர் எண்ணிக்கை குறையும்போது, குறைந்த பணியாளர் திறனுடன் அதிக அவுட்புட் முடிவுகளைத் தர முடிவதாக அந்நிறுவனம் வெளிக்காட்டிக் கொள்ளலாம். மேலும், இதனால் அதிக முதலீடுகளை அந்நிறுவனம் ஈர்க்கலாம். அப்படிச் செய்வதால், அதன் பங்குகள் விலை உயரும்.

மேற்கண்ட காரணங்களுக்காகப் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, அதன்பின், ஏஐ மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது” என்கிறார்.

அமேசானில் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில், தான் கைதேர்ந்திருந்தபோதிலும் தன் மீதான இத்தகைய கடும் நடவடிக்கையை எதிர்பார்க்காததால், அந்நிறுவனத்தில் எட்டாண்டுகளைக் கடந்தும் பணியாற்றி இப்போது வேலையிழந்து நிற்கும் அந்த ஊழியர் விமர்சிப்பதில் விசித்திரம் இல்லையே.

அமேசான் சில்லறை வணிகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் 5,000 பேரை நீக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் சுமார் 14,000 பேர் பணிநீக்கப்பட்டனர். அப்படிப் பார்க்கும்போது, அந்நிறுவன தலைமைப் பதவியை ஜேசி ஏற்றுக்கொண்டபின், இதுவரை மொத்தம் 30,000 பேர் பணிநீக்கப்பட்டுள்ளனர்.அமேசான் பாணியில் பிண்டெரெஸ்ட், டவ் ஆகிய நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

சமூக ஊடகத் தளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிண்டெரெஸ்ட் நிறுவனம், தமது ஒட்டுமொத்த பணியாளர்தொகையிலிருந்து, 15 சதவீதத்தைக் குறைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கான காரணமாக, ஏஐ தொழில்நுட்பம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டோவ் நிறுவனத்திலிருந்து 4,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கும் ஏஐ தொழில்நுட்பமே காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹோம் டெபோட்ஸ் நிறுவனம் 800 பணியிடங்களை நீக்கப்போவதாக அறிவித்தது. ஆனால் அதற்கு ஏஐ காரணமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலோடான் நிறுவனம் தமது பணியாளர்தொகையில் 11 சதவீதம் வரை நீக்கப்போவதாகவும், அதற்கான காரணங்களாக நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கவும் செலவை குறைப்பதற்கான நடவடிக்கை என்றுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஏஐ தொழிநுட்பத்தின் தாக்கம், பணியாளர் சந்தையில் குறைந்தளவிலேயே இருக்கும் என்று குறிப்பிடும் அத்துறைசார் ஆய்வாளர்கள், மார்க்கெட்டிங், கிராபிக் டிசைன், வாடிக்கையாளர் சேவை மற்றும் சில தொழில்நுட்ப பணிகளில்தான் அதன் தாக்கம் அதிகம் என்கின்றனர்.

ஓரகிள் நிறுவனம் 3,000 பேரை பணிநீக்க தயாராகிவிட்டதாம். நிதிச்சுமையைக் குறைக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தப் போவதையும் இதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவில் கடந்தாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இப்போது, பணிநீக்க விகிதம் 42 சதவீதம் உயர்ந்துள்ளதாம்!

இதைப் பற்றி, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க் குறிப்பிடும்போது, ஒன்றை நமக்கெல்லாம் தெளிவாக்குகிறார். ‘2026-ஆம் ஆண்டானது, நாம் எப்படிப்பட்ட பணிச்சூழலில் இனி பணியாற்றப் போகிறோம் என்பதில் ஏஐ ஒரு மாற்றத்தை ஆரம்பிக்கப் போகிறது’ என்றிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.