ஏஐ, டீப்ஃபேக் சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடு: புதிய விதிகள் பிப்.20-இல் அமல்!
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய விதிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் பிப்.20-ஆம் தேதி அமலாகிறது. இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆடியோ, விடியோ அல்லது ஆடியோ-விடியோ தகவல்கள் உள்பட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள் அல்லது சித்தரிக்கப்பட்ட பதிவுகளுக்கான உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
ஏஐ-யால் உருவாக்கப்படும் பதிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை சோ்க்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் (எக்ஸ், இன்ஸ்டாகிராம்) உறுதிசெய்ய வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் பதிவுகள், போலி ஆவணங்கள், டீப்ஃபேக் போன்ற சட்டவிரோத பதிவுகளுக்கு சமூக ஊடகங்கள் தடை விதிக்க வேண்டும்.
சட்டவிரோத பதிவுகள் என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டால் அந்தப் பதிவுகளை 3 மணி நேரத்தில் சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும். முன்பு இதற்கான காலஅவகாசம் 36 மணி நேரமாக இருந்தது.
ஏஐயால் உருவாக்கப்பட்டது என பதிவில் குறிப்பிட்ட பின் அதை சமூக ஊடகங்கள் நீக்கவோ அல்லது மறைக்கவோ கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.