;
Athirady Tamil News

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு

0
காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் என கடல்பாசி துறை சர்வதேச ஆலோசகர் குலேந்திரன் சிவராம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோர மக்களுக்கு நிலையான மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய கடல்பாசி தொழில்துறை வளர்ச்சி குறித்து இந்தியாவில் நடைபெற்ற 7 ஆவது இந்திய சர்வதேச கடல்பாசி கண்காட்சி மற்றும் உச்சிமாநாட்டில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடல் வெப்பநிலை உயர்வு, புயல் தாக்கங்கள், மீன் வளக் குறைவு, பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் பாரம்பரிய வாழ்வாதாரம் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், கடல்பாசி வளர்ப்பு சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான மாற்று வருமான வழியாக உருவெடுத்து வருகிறது.

இலங்கையில் 2012 ஆம் ஆண்டு துடுப்பு முறையில் ஆரம்பிக்கப்பட்ட கடற்பாசி செய்கை 2018 ஆம் ஆண்டிலிருந்து மொனேலைன் முறைக்கு மாற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது வெறும் சிறு அளவிலான திட்டமாக இல்லாமல், ‘Aqua Agriculture’ எனப்படும் சமூக அடிப்படையிலான வாழ்வாதார முறைமையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க வழிவகுத்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இத்துறை திட்டமிட்டு விரிவுபடுத்தப்பட்டால், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரும்பான்மையான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கடல்பாசி வளர்ப்பில் கடல் வெப்பநிலை உயர்வு, உப்பு அளவு மாற்றம், பலத்த காற்று, புயல் தாக்கம் போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன. மேலும் Epiphytes தாக்கம், மீன் மேய்தல், உலர்த்தல் மற்றும் சேமிப்பு வசதிகள், போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் திட்டமிட்ட கடல்பாசி மண்டலங்களை அறிவித்து, பயிற்சி, நிதி உதவி, செயலாக்க மையங்கள் மற்றும் ஏற்றுமதி இணைப்புகளை ஏற்படுத்தும்போது வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்பை பாசிவளர்பினூடாக ஏற்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.