;
Athirady Tamil News

ஈரான் போர் தற்காலிக நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

0

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையே நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பது குறித்து வாஷிங்டன்னும் தெஹ்ரானும் கடந்த இரண்டு நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

”மத்திய கிழக்கில் உள்ள பகைமைகளுக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பது குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் மிகச்சிறந்த மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை கடந்த இரு நாள்களாக மேற்கொண்டன. இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவு மற்றும் அதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மை காரணமாக ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்பில் உள்ள நட்பு நாடுகளிலுள்ள அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியே ஈரான் அனுமதி மறுத்துள்ளது. இதனால் பிரிட்டனின் உதவியுடன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அரபிக் கடலில் அமெரிக்கா நிலை நிறுத்தியது. இதனிடையே நேற்று அமெரிக்காவுக்குச் சொந்தமான எப்-15 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனை ஈரான் வெளிப்படையாக விடியோ வெளியிட்டு அறிவித்தது.

ஈரான் அடிபணியும் என்ற நோக்கத்தில் அமெரிக்கா அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்திய நிலையில், ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்ததால், சர்வதேச அளவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.