;
Athirady Tamil News

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

0

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் என அவர் தெரிவித்தார்.

தற்போது முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசாது என்பதுடன், காற்றின் வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுவதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் கடல் மற்றும் நிலப்பரப்பு வெப்பமடைந்து வெப்ப அலைகளை வெளியிடுகின்றன.

இதன் மூலம் வளிமண்டலம் மேலும் வெப்பமடைகிறது. தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும், அடிக்கடி நீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.