;
Athirady Tamil News

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

0

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக இடமளித்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் அண்மையில் சில விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதற்கமைய, மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அதிகாரசபைகளுக்கும் பொருந்தும்.

குறித்த தீர்மானம் கல்வித்துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச, அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்கள், தொழிற்பயிற்சி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறையினர் முடிந்தவரை ‘ஒன்லைன்’ முறையில் ஊழியர்களை பணியில் அமர்த்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சுகாதாரம், வங்கி, மின்சாரம், நீர், துறைமுகம், சுங்கம் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை முறைமை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.