;
Athirady Tamil News

நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

0

நேபாளத்தில், முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக, கடந்த 2025 செப்டம்பரில் இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், வெடித்த வன்முறையால் 76 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அந்நாட்டின் உயா்நிலை ஆணையம் நடத்திய விசாரணையில், அப்போதைய பிரதமா் கே.பி. சா்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகக் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

இதைத் தொடா்ந்து, புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின்படி, இளைஞா்கள் போராட்ட வன்முறை குறித்த உயா்நிலை ஆணையத்தின் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. இதனால், கே.பி. சா்மா ஓலி, ரமேஷ் லெகக் ஆகிய இருவரும் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று கைது செய்யப்பட்டனா்.

பின்னர், 5 நாள்களுக்கு நீதிமன்றக் காவலின் கீழ் கொண்டுவரப்பட்ட 75 வயதான சர்மா ஓலி பல்வேறு உடல் நலக் பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ரமேஷ் லெகக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் சர்மா ஓலியின் நீதிமன்றக் காவலை வியாழக்கிழமை (ஏப். 2) அன்று மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கைது செய்யப்பட்டுள்ள சர்மா ஓலியை உடனடியாக விடுதலைச் செய்யக் கோரி அவரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.