மட்டக்களப்பில் இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து நவீன ஸ்கேனர் இயந்திரம் ஒன்றும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, அதிகாலை 5.00 மணியளவில் திக்கோடை ஆனந்த பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது, அவ்வீட்டில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை மற்றும் திக்கோடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் இருப்பதை கண்டறிய பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அவர்கள் வருகை தந்த வேன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.