தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; மருத்துவ தம்பதி செய்த செயல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்ப , விபத்து ஏற்பட்டபோது வீதியால் சென்ற மருத்துவ தம்பதிகள் உதவி புரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடாங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையே இன்று (06) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஊர்தியுடன், சிமெந்துத் தூள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தங்கியிருந்து மீட்புப் பணி
இந்த விபத்தில் இரண்டு சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த வேளையில் அந்த வீதியால் பயணித்த கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் கித்மா குணரத்ன மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தின் வைத்தியர் வித்வ களுதொட்ட ஆகியோர், உடனடியாகச் செயற்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.டயர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து மிதிகம நோக்கிச் சென்ற கொள்கலன் ஊர்தியின் பின் சக்கரம் ஒன்றில் காற்று வெளியேறியதால், அதனை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்திச் சாரதி சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருந்த போதே பின்னால் வந்த சிமெந்து பவுசர் வாகனம் அதன் மீது மோதியுள்ளது.
விபத்தின் போது சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன் பகுதியில் மூவர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியே எடுத்து, அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை மீட்பதற்கு சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்துள்ளது. இதன் காரணமாக ஒரு மருங்கு சுமார் 2 மணித்தியாலங்கள் மூடப்பட்டதுடன், சாரதியை வெளியே எடுக்கும் போது சுமார் அரை மணித்தியாலம் வீதி முழுமையாக மூடப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மீட்பு பணியாளர்களுடன் நின்று தாமும் சேவையாற்றிய மருத்து தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.