சபையிலிருந்து வெளியேற்றுவேன்; சாணக்கியன் மீது சீறி விழுந்த சபாநாயகர்; சபையில் அமளி துமளி!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (10) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘அஸ்வெசும’ நலத்திட்டம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பிலும், அங்கு மீன்பிடித்துறை அமைச்சரால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்தும் சாணக்கியன் எம்.பி. இதன்போது கருத்து வெளியிட்டார்.
மீன்பிடித்துறை அமைச்சர் இவர்தான், இருவர் இல்லை
அதனைத் தொடர்ந்து, மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுந்து விளக்கமளித்தார். அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி., “நான் அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை ஆனால் அவர் எனது பெயரைப் பயன்படுத்திக் கருத்துத் தெரிவித்தார்.
அதற்கு நான் விளக்கமளிக்க வேண்டும்” எனக் கோரி நின்றார். அதற்கு இடமளிக்காத சபாநாயகர், “உங்களுக்குச் சிங்களம் நன்றாகத் தெரியும் இந்தச் சபையில் இருக்கும் ஒரேயொரு மீன்பிடித்துறை அமைச்சர் இவர்தான், இருவர் இல்லை.
ஆகையால், அவரால் பதிலளிக்க முடியும். நீங்கள் அமருங்கள்; இல்லையேல் உங்களைச் சபையிலிருந்து வெளியேற்றுவேன் எனப் பலமுறை கடும் எச்சரிக்கை விடுத்தார்.