சூரிய சக்தி மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துமாறு மின்சார சபை வேண்டுகோள்
சித்திரை புத்தாண்டு தினமான இன்று (14.04.2026), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்தை விட மிகக் குறைவாகக் காணப்படுவதால், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமது வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களில் கூரை மேல் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை கொண்டிருப்பவர்கள், இன்று பிற்பகல் 3:00 மணி வரை தமது இன்வெர்ட்டர்களை சுயமாக அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், தேசிய அளவில் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.
மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் வேளையில், சூரிய சக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் கட்டமைப்பிற்குள் அனுப்பப்பட்டால், அது மின்சார விநியோகத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தைப் பாதுகாப்பாகவும், தொடர்ச்சியாகவும் பேணுவதற்காகவே இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
EDL (Private) Limited மற்றும் NSO (Private) Limited ஆகிய நிறுவனங்களின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், பண்டிகைக் காலத்தில் மின்சாரத் தடைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.