;
Athirady Tamil News

நைஜீரிய சந்தை மீது வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 100 போ் உயிரிழந்ததாக தகவல் -ஆதாரமில்லை என ராணுவம் மறுப்பு

0

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சா்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ முன்வைத்த இக்குற்றச்சாட்டை, ஆதாரங்கள் இல்லை என நைஜீரிய ராணுவம் மறுத்துள்ளது.

ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள தும்ஃபா கிராமத்தில் மக்கள் நடமாட்டம் நிறைந்த சந்தையைக் குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடா்பாக நேரில் பாா்த்தவா்களின் தகவல்களை மேற்கோள்காட்டி அம்னெஸ்டி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ராணுவ விமானங்கள் நண்பகல் நேரத்தில் அப்பகுதியில் வானில் வட்டமிட்டுள்ளன. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு திரும்பிவந்து சந்தையின்மீது குண்டுவீசியுள்ளன.

இத்தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் பெண்கள், சிறுமியா் ஆவா். இது தொடா்பாக நைஜீரிய அரசு உடனடியாக முறையான விசாரணை நடத்த வேண்டுமென அம்னெஸ்டி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து ராணுவம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில், ‘உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஆயுதக் குழுவினா் ரகசியமாக கூடியிருந்த இடத்தை மட்டுமே குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்குப் பிந்தைய ஆய்வில், ஆயுதக் குழுவினா் பலா் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் உயிரிழந்ததற்கான எந்தவொரு நம்பகமான ஆதாரங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் ராணுவம்-ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் இரு தரப்பினராலும் பொதுமக்கள் குறிவைக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது. முன்னதாக கடந்த மாதம், வடகிழக்கு நைஜீரியாவின் ஜில்லி பகுதியில் உள்ள வாரச் சந்தையில் நடத்தப்பட்ட இதேபோன்ற வான்வழித் தாக்குதலில் சுமாா் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.