இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை
இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) இரவு அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், தரமற்ற சமையல் பாத்திரங்களும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான குழுவினர், இப்பகுதியிலுள்ள 12 உணவகங்களை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, சமையலறைகளின் தூய்மை, உணவுப் பொருட்கள் சேமிக்கப்படும் முறைகள் மற்றும் உணவு கையாளுபவர்களின் சுகாதார நடைமுறைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டன.
இந்த ஆய்வின்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், உணவு தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய நிலையில் காணப்பட்ட ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனையின்போது உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா, இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
