தமிழர் பகுதியை உலுக்கிய பொறியியல் மாணவரின் மரணம் ; இரவில் பெரும் துயர் சம்பவம்
பண்டாரவளை – பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்கள் குழுவினர்
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, இருதயபுரம், கோவில் வீதியைச் சேர்ந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான 22 வயதுடையவர் எனப் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்த மாணவனின் அதே வயதுடைய நண்பர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன், தனது நண்பர்கள் குழுவினருடன் இணைந்து நான்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றுள்ளார்.
இவர்கள் இரவு தங்குவதற்காக எல்ல பகுதியில் உள்ள தங்குமிடத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த காருடன், இம்மாணவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.