;
Athirady Tamil News

இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

0

நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு, கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கையடக்கத் தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கைகளுக்குச் செல்வது, உரிமையாளர்களுக்குப் பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருடப்பட்ட தொலைபேசிகள்
தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் பெரும்பாலும் சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட பொலிஸார், நிதித் தரவுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொலைபேசி தொலைந்தவுடன், தொடர்புடைய சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு உடனடியாக சிம் அட்டையை செயலிழக்கச் செய்யவும். இது குறித்த நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்.

பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது, தொலைபேசியின் IMEI எண்ணை (International Mobile Equipment Identity) கட்டாயம் வழங்க வேண்டும்.

உங்கள் தொலைபேசியின் IMEI எண்ணை அறிய *#06# க்கு அழைப்பை ஏற்படுத்தவும். தொலைந்த தொலைபேசிகளைக் கண்டறிய இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள ineed.police.lk என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும்.

பிறருக்குச் சொந்தமான உடைமைகளைத் தன்னிடம் வைத்துக்கொள்வது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் ‘குற்றவியல் முறைகேடு’ (Criminal Misappropriation) ஆகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கப் பெறலாம்.

எனவே, கண்டெடுக்கப்படும் தொலைபேசிகளை உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்து, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், திருடப்பட்ட தொலைபேசிகளை மலிவான விலையில் வாங்கி வைத்திருப்பது ஒரு குற்றமாகும். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இரண்டாம் நிலை (Second-hand) தொலைபேசிகளை வாங்கும் போது, அவை திருடப்பட்டவை அல்ல என்பதை I Need முறைமையின் “Find Genuine Phone” வசதியைப் பயன்படுத்திச் சரிபார்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான தொலைபேசிகளை மீட்டெடுத்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகத்திற்குரிய வகையில் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.