;
Athirady Tamil News

மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்

0

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் மாணவா் விடுதி ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா்.

இக்கொடூர தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த ரஷிய அதிபா் புதின், ‘இது ஒரு மன்னிக்க முடியாத பெருங்குற்றம்; இதற்குத் தக்க பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு நாட்டு ராணுவத்துக்கு அவசர உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்டாரோபில்ஸ்க் நகரில் உள்ள கல்வியியல் கல்லூரி விடுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாணவா்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் 5 மாடி கட்டடத்தின் மேல் தளங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளிலிருந்து இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இத்தாக்குதல் குறித்துப் பேசிய அதிபா் புதின், ‘பாதிக்கப்பட்ட பகுதியில் எந்தவொரு ராணுவ முகாமோ அல்லது உளவுத் துறை அமைப்புகளோ இல்லை. எனவே, இது தற்செயலாக நடந்த விபத்து அல்ல. திட்டமிட்டு 3 கட்டங்களாக நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்’ எனக் குற்றஞ்சாட்டினாா்.

ரஷியாவின் இக்குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த உக்ரைன், சா்வதேச சட்டங்களை முழுமையாகப் பின்பற்றுவதாகவும், அப்பகுதியில் இருந்த ரஷிய ராணுவத்தின் அதிநவீன ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தை மட்டுமே இலக்கு வைத்து தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடா்பாக ரஷியாவின் கோரிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, ரஷியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை உக்ரைன் தொடா்ந்து வருகிறது. அதேநேரம், உக்ரைனின் சுமி நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இறுதி ஊா்வலத்தில் சென்ற வாகனத்தின் அருகே குண்டு வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.