பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது : டக்ளஸ் பகிரங்கம்
தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமான சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஆட்சியில் இருந்த காலத்தில் பிரபாகரனின் படத்தின் மீது இருந்து ஈர்ப்பின் காரணமாக அவர்கள் சார் நிகழ்வொன்றில் ஓர் இளைஞன் பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட ரீசேட் ஒன்றை அணிந்து நடனமாடியிருருந்திருக்கின்றார்.
இந்த விடயத்தை அறிந்த பொலிசார் அவரை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக அந்த இளைஞனின் தாயார் என்னிடம் வந்து நிலைமையை கூறி தனது கவலையை வெளிப்படுத்தியிருந்த நிலையில் நான் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு தயவுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவ்விடயத்தை கொண்டு செல்லாது சாதாரண சட்டங்களின் கீழ் அவ்விடயத்தை பார்க்க வேண்டும் என்று எடுத்துரைத்ததுடன் அந்த இளைஞன் தவறான வழிநடத்தலால் தான் அவ்வாறு மேற்கொண்டுவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டி அவருக்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுவிக்குமாக கோரியிருந்தேன்.
எனது கருத்தை ஏற்று குறித்த இளைஞரை பொலிசார் விடுவித்திருந்தனர்.
இதேவேளை இன்றைய ஆட்சியாளர்கள் கூட வடக்கில் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக தமது தேர்தல் மேடைகளில் இவ்வாறான பாடல்களை ஒலிபரப்பிய அல்லது பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுத்ததாக பல பதிவுகள் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பொலிசாருடன் பேசி அந்த இளைஞனை விடுவிக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றதோ அல்லது எமது மக்கள் மீதான அவர்களுக்கு உணர்வு இருக்கின்றதோ என பார்க்க வேண்டும்
எமது மக்கள் அளித்த வாக்கின் பிரகாரம் நாடாளுமன்றில் இருப்பதால் இவ்விடயத்தை தமது தலைமையிடம் எடுத்துச் சொல்லி குறித்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு செல்லாது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.