மத்தியஸ்தர்களை சந்திக்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் உள்துறை அமைச்சர்!
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் வேளையில் பாகிஸ்தானில் உள்ள மத்தியஸ்தர்களை சந்திக்க ஈரான் உள்துறை எஸ்கந்தர் மொமேனி அமைச்சர் அங்கு சென்றடைந்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு ஹோர்முஸ் நீரிணையும் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடர்ந்தது. இதற்கு, ஈரானும் பதிலடி கொடுக்க போர் இரு நாடுகளுக்கிடையேயும் மீண்டும் தொடங்கி கடந்த 10 நாள்களாக தாக்குதல்கள் தொடரப்பட்டு வருகின்றன.
உலகளவில் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல் செயல்படாமல் உள்ளதால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. எனவே, உலகின் பல நாடுகளில் விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி பாகிஸ்தானில் உள்ள மத்தியஸ்தர்களை சந்திப்பதற்காக அந்நாட்டுக்கு சென்றடைந்துள்ளார். இந்த சந்திப்பில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, போர் தொடங்கியமுதலே இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் பிரதிநிதிகள் தொடர் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.