;
Athirady Tamil News

வேலை தேடி சென்றபோது… வெளிநாட்டில் விபசாரத்தில் தள்ளிய கும்பல்; இளம்பெண்ணின் அதிர்ச்சி அனுபவம்

0

லிஸ்பன்

மராட்டியத்தில் வேலை கேட்டு சென்ற இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விட்டு வெளிநாட்டு விபசாரத்தில் தள்ளிய கும்பல் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலை தேடி வந்துள்ளார். அப்போது வி மைக்ரேட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பார்த்துள்ளார். புனே நகரில் விமன் நகரை அடிப்படையாக கொண்ட வெளிநாட்டில் ஆள்சேர்த்து விடும் அந்த ஏஜென்சியை 2025-ம் ஆண்டு டிசம்பரில் அணுகியுள்ளார்.

அவர்கள், ஐரோப்பாவில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை உள்ளது என வாக்குறுதி அளித்துள்ளனர். பின்னர் வெளிநாட்டு வேலைக்கான விசாக்களை தங்களுடைய வாடிக்கையாளர்கள் சிலர் வைத்துள்ள வீடியோக்களையும் அந்த பெண்ணிடம் காட்டியுள்ளனர்.

8 மணிநேரம்

நாளொன்றுக்கு 8 மணிநேரம் அடிப்படையில் மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். வாரத்திற்கு 2 நாள் விடுமுறை மற்றும் 3 ஆண்டு வேலைக்கான அனுமதி ஆகியவற்றுடன் கூடிய காசாளர் பணி உள்ளது என பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்துள்ளனர்.

விசாவுக்காகவும், வேலைக்கான பணிக்காகவும் என கூறி பல தவணைகளாக ரூ.11 லட்சம் வாங்கி கொண்டனர். கடைசியாக கடந்த மார்ச்சில், அவரை அழைத்து சில ஆவணங்களில் கையெழுத்திட செய்தனர். ஆனால் எந்த நகலையும் தரவில்லை.

பாஸ்போர்ட் பறிப்பு

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அந்த பெண், கடந்த மே 21-ந்தேதி மும்பையில் இருந்து அபுதாபிக்கு சென்று பின்னர் மேட்ரிட் நகருக்கு சென்றார். பின்னர், அவர் போர்ச்சுகல் நாட்டுக்கு வம்சி என்பவரால் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் சைதன்யா அவரை அழைத்து சென்று ஹிம்மத் சிங் என்பவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இதன்பின்பு அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்து கொண்டு, அறை ஒன்றில் 2 நாட்களாக அடைத்து வைத்தனர். இதன்பின்னரே போர்ச்சுகல்லில் உள்ள பீர் கடை உரிமையாளருடன் ஒன்றாக தங்க வைக்கப்பட்டார். அவருடன் ராஜஸ்தான், அரியானாவை சேர்ந்த 2 பெண்கள் தங்கியிருந்தனர்.

ஏஜென்டுகளிடம் பணம்

அவர்கள் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர். நல்ல வேலை என வாக்குறுதி அளித்து, பீர் உரிமையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையில் தள்ளி விட்டனர் என தெரிவித்தனர். இதன்பின்பு, பீர் உரிமையாளரின் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது, இந்தியாவில் உள்ள குற்றவாளிகளில் ஒருவர், உங்களுடைய ஆவணங்கள் தயாராகி வருகின்றன.

அதுவரை பீர் உரிமையாளரை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என தொலைபேசியில் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்து விட்டார். அப்போது அந்த பீர் உரிமையாளர், உன்னை வாங்க, அந்த ஏஜென்டுகளிடம் பணம் கொடுத்து இருக்கிறேன் என கூறி மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால், அவருடன் விபசார தொழிலில் ஈடுபட அந்த கும்பல் தள்ளி விட்டதும், அவரிடம் விலைக்கு விற்றுள்ளனர் என்பதும் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்கு தப்பினார்

இதுபற்றி உடனடியாக கணவரை தொடர்பு கொண்டு அவரிடம் விவரங்களை கூறியுள்ளார். பின்னர், அந்த வீட்டில் இருந்து அவர் தப்பினார். லிஸ்பன் நகருக்கு பஸ்சில் வந்து பின்னர் மேட்ரிட் நகருக்கு தப்பினார். பஸ் நிலையத்தில் பல நாட்கள் தங்கியும், விடுதியில் தங்கியும் இருந்த அவர் பின்னர் தோஹா வழியாக டெல்லி வந்து, நாக்பூர் திரும்பினார்.

இதன்பின்பும், குற்றவாளிகள் அந்த பெண்ணை தொடர்ந்து தொடர்பு கொண்டு மால்டாவில் வேலை உள்ளது. ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கணவரை மிரட்டியும் வந்துள்ளனர்.

போலீசில் புகார்

இதுதொடர்பாக போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், புனேவை சேர்ந்த பிரதிமா பாட்டிய, அமித் குமார் ஜா, அசார் ஷேக் மற்றும் கபில் மிஸ்ரா ஆகிய 4 பேர் மற்றும் போர்ச்சுக்கல்லை சேர்ந்த வம்சி, சைதன்யா மற்றும் ஹிம்மத் சிங் ஆகிய 3 பேர் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.