;
Athirady Tamil News

தங்கையை கிண்டல் செய்த வாலிபரை 50 முறை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்..!!

0

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் நந்தா என்ற நந்தன்(வயது 21). அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன். இந்த நிலையில் தர்ஷனின் தங்கையை நந்தா அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தர்ஷனிடம் தெரிவிக்க அவர் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர் நந்தாவை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார்.

ஆனால் நந்தா அதை கேட்கவில்லை. மீண்டும், மீண்டும் தர்ஷனின் தங்கையை அவர் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். ஒருமுறை அவர் தனது செல்போனில் அந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இதனால் பதறிப்போன அந்த பெண் இதுபற்றி தர்ஷனிடம் தெரிவித்துள்ளார். இதில் கடும் கோபம் அடைந்த தர்ஷன், நந்தாவை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து கண்டித்துள்ளார். மேலும் புகைப்படத்தையும் உடனடியாக அழித்துவிடும்படி கூறியிருக்கிறார். இருப்பினும் நந்தா அதை கேட்கவில்லை. மீண்டும் அவர் அந்த இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தர்ஷன், தனது நண்பன் ஒருவன் மூலம் நந்தாவை மோட்டார் சைக்கிளில் தொட்டபள்ளாப்புரா அருகே உள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹொரபண்டே கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வைத்து நந்தாவை, தர்ஷனும், அவரது நண்பரும் சேர்ந்து கடுமையாக எச்சரித்து கண்டித்துள்ளனர். அப்போது தர்ஷனுக்கும், நந்தாவுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதனால் கோபமடைந்த தர்ஷன், தன்னிடம் இருந்த கத்தியால் நந்தாவை சரமாரியாக குத்தினார். சுமார் 50-க்கும் அதிகமான முறை சரமாரியாக குத்தினார்.

இதில் நிலைகுலைந்த நந்தா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து தர்ஷனும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷனையும், அவரது நண்பரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கையை கிண்டல் செய்த வாலிபரை அண்ணன் 50-க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.