இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/10/Screenshot-2023-10-16-104117-750x430.jpg)
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப் படகையும் அதிலிருந்து 12 கடற்றொழிலாளர்களை கைது செய்தது.
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
அதை போல தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப் படகையும் அதிலிருந்து 15 கடற்றொழிலாளர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது.
இந்த நிலையில், ஐந்து விசை படகையும், 27 கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18 ஆம் திகதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.