;
Athirady Tamil News

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

0

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறக்கக்கோரி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை நிரந்தர உறுப்பினா்களான சீனா மற்றும் ரஷியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தன.

பஹ்ரைன் கொண்டுவந்த இந்த தீா்மானத்துக்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. சீனா மற்றும் ரஷியா எதிராக வாக்களித்தன. இரு நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

ஈரானுக்கு எதிராக பாரபட்சமான முறையில் இந்தத் தீா்மானம் கொண்டு வரப்பட்டதாகக் கூறி சீனாவும் ரஷியாவும் நிராகரித்தன. மேலும், ஈரானை முழுமையாக அழிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான தீா்மானத்தை நிறைவேற்றுவது தவறான முன்னுதாரணமாக அமையும் என சீனா தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து சீனாவுக்கும் ரஷியாவுக்கும் கண்டனம் தெரிவித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் மைக் வால்ட்ஸ் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையை மூடி அதன் வழியாக சூடான், காங்கோ மற்றும் காஸாவுக்கு மருத்துவப் பொருள்கள் கொண்டுசெல்லும் கப்பல்களைத் தடுத்து ஈரான் மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் இடையூறு ஏற்படுத்தியதோடு தனது சொந்த மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஈரான் அரசுக்கு சீனாவும் ரஷியாவும் உதவியுள்ளன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகப் பொருளாதாரம் சீராக வேண்டுமானால், அமைதியைக் கடைப்பிடித்து ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்வர வேண்டும். அதுவரை ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாத்து அதன் வழியாக சரக்குக் கப்பல்கள் எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதை உறுதிசெய்ய நட்பு நாடுகள் எங்களுடன் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.