உயிருக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் பரிதாப மரணம்
கிரிந்த கடற்கரையில் உயிக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற போது நீரில் மூழ்கி பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதல்கும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர் கிரிந்த கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, பலத்த கடல் அலையில் மாணவி சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் வைத்தியசாலையில் அனுமதி..
அதனை தொடர்ந்து மாணவியை காப்பாற்றச் சென்ற, ஆசிரியரும் நீரில் சிக்கி அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது, கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் இருந்த ஆசிரியரும், பாடசாலை மாணவி ஒருவரும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் பாதல்கும்புர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கணித பாட ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக கிரிந்த வைத்தியசாலையிலிருந்து திஸ்ஸமஹாராம தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.