நேபாளம் – இந்திய எல்லையோர மாவட்டத்தில் சமூகக் கலவரம்: காலவரையற்ற ஊரடங்கு அமல்
இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மேலும் காவல்துறையினா் உள்பட 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
மாவட்டத்தின் கப்தன்கஞ்ச் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவேறு மதச் சமூகத்தினா் நடத்திய நிகழ்ச்சிகளின்போது ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.
இந்தப் பதற்றமான சூழலையடுத்து விதிக்கப்பட்ட ஊரடங்கை செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்று நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.