;
Athirady Tamil News

சிலருக்கு கைகள் ஏன் எப்போதும் நடுங்குகின்றன? இதற்கு சிகிச்சை என்ன? !! (கட்டுரை)

0

நாம் பல வியாதிகளை வயது மூப்புடன் தொடர்புபடுத்துகிறோம்.

அதில் ஒன்று கை நடுக்கம்.

வயது மூப்படைவது கை நடுங்குவதை அதிகப்படுத்தினாலும், அது மூப்பினால் மட்டுமே வரும் வியாதியல்ல. இது ஒரு நபருக்கு முன்னரே வந்ததனால் தான் வயதானதும் அது அதிகமாகிறது.

Essential tremor எனப்படும் இந்த நரம்பு மண்டலக் கோளாறு, 60 வயதுக்கு மேலானவர்களில் 6% பேரை பாதிக்கிறது. ஆனால் முன்னரே சொன்னதுபோல இது இளம் வயதிலிருந்தே கூடத் துவங்கியதக இருக்கலாம்.

பார்க்கப்போனால், இதனால் பாதிக்கப்பட்ட பலரும் , தங்கள் வாழ்நாள் முழுதும் இந்த நடுக்கத்தை அனுபவித்து வருவதாகச் சொல்கிறார்கள். வயதாக ஆக, அது அதிகரித்து, தங்கள் தினசரி நடவடிக்கைகளை பாதிப்பதாகக் கூறுகிறார்கள்.

இது ஒரு நரம்புச் சிதைவு நோயல்ல. உடல் அசைவுகளோடு தொடர்புடைய சில நரம்பு மண்டலச் சுற்றுப்பாதைகளில் இருக்கும் சில கோளாறுகளால் இது ஏற்படுகிறது.

பொதுவாக, இது ஒரே குடும்பத்தில் பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு மரபணுக் காரணி உள்ளது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதற்கானக் குறிப்பிட்ட மரபணுக்கள் கண்டறியப்படவில்லை.

இந்த நடுக்கம், ஒரு செயலைச் செய்யும்போது இரு கைகளிலும் ஏற்படுகிறது. இருப்பினும் ஏதாவது ஒரு கையில் அதிகமாக ஏற்படும்.

நடுக்கம் அதிகமாக இருந்தால், எழுதுதல், தண்ணீர் டம்ப்ளரைக் கொட்டாமல் வைத்திருத்தல், சாப்பிடும் போது ஸ்பூனைப் பயன்படுத்துதல், பல் துலக்குதல், ஒப்பனை செய்தல், ஷேவிங் செய்தல், பொத்தான்கள் அல்லது ஜிப்பர்களைப் போதுதல், போன்ற அன்றாடப் பணிகளைச் செய்வதற்கும் நோயாளி சிரமப்படுவார். சிலருக்கு குரல் அல்லது தலையிலும் நடுக்கம் ஏற்படலாம்.

இது ஒரு நோய் ஆகும். இது தீவிரமானால், நமது வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கும். அதனால்தான் இதற்குத் தனிப்பட்ட தீர்வைத் தேடுவது முக்கியம்.

இந்த நரம்பணுக்களின் சரியான இயக்கத்திற்குத் தேவையான சீரான செயல்பாட்டிற்குப் பதில் ஒரு ஊசலாட்டச் செயல்பாட்டு நிகழ்கிறது.

உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்யும், மூளையின் மத்தியில் இருக்கும் தாலமஸின் நரம்பணுக்களில் ஏற்படும் சில பிரச்னைகளால் இந்த நடுக்கம் ஏற்படுகிறது.

இந்த நரம்பணுக்களின் சரியான இயக்கத்திற்குத் தேவையான சீரான செயல்பாட்டிற்குப் பதில் ஒரு ஊசலாட்டச் செயல்பாட்டு நிகழ்கிறது. இதனால், ஒரு செயலைச் செய்யச் செல்லும் போது, இந்த ஊசலாட்டத்தின் அலைவரிசையிலேயே கைகள் நடுங்குகின்றன.

இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் தாலமஸ் பகுதியில் ஏற்படும் இந்தச் சிக்கல்களோடு தொடர்புடைய வகையில் சிறுமூளையிலும் சில பிரச்னைகள் ஏற்படுவதாகச் சில தரவுகள் குறிப்பிடுகிறன.

எனவே, இது பார்கின்சன்ஸ் போன்ற பிறச் சிதைவு நோய்களிலிருந்து வேறுபட்டது. பார்கின்சன்ஸ் நோய் டோபமைனை உற்பத்தி செய்யும் நியூரான்களின் சிதைவினால் ஏற்படுகிறது. பார்கின்சன் நோயாளிகள் சரியாக நடக்க முடியாதது, விறைப்பு போன்ற பிற பிரச்னைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு நோயாளிக்கு இந்த வகையான நடுக்கம் ஏற்பட்டால், அவர்களின் உடலியக்க சர்க்யூட்டை மீண்டும் சரியான முறையில் செயல்பட வைக்கவேண்டும்.

இதற்கு, நரம்பணுக்கள் செயல்படும் முறையைச் சீராக்க வேண்டும்..

இந்த நோயைச் சர்ப்படுத்தப் பயன்படுத்தப்படும் முக்கிய சிகிச்சைகள், மாரடைப்பு வந்தவர்களுக்கு இதயத் துடிப்பின் கதியைச் சரி செய்யப் பயன்படுத்தப்படும் பீட்டா-ப்ளாக்கர்கள் அல்லது வலிப்பு வருவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டி-எபிலெப்டிக் மருந்துகள்.

இருப்பினும், இவற்றின் பயன்பாடு பொதுவாக நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த போதுமானதாக இருப்பதில்லை.

மிகக் குறைந்த அளவே உடலில் அறுவை சிகிச்சை தேவைப்படும் இந்த முறை, பல நோயாளிகளுக்கு எளிதானதாக இருக்கிறது
சரியான தீர்வளிக்கும் சிகிச்சை

ஆனால், அதிர்ஷ்டவசமாக இதற்கு மற்றொரு தீர்வும் உள்ளது.

High-Intensity Focused Ultrasound (HIFU) என்ற சாதனம்தான் அது.

இது மண்டையோட்டைத் திறக்காமலேயே, கட்டுப்படுத்தப்பட்ட முறையில், தாலமஸின் பாதிக்கப்பட்ட நியூரான்களைச் சரிசெய்ய உதவுகிறது.

மிகக் குறைந்த அளவே உடலில் அறுவை சிகிச்சை தேவைப்படும் இந்த முறை, பல நோயாளிகளுக்கு எளிதானதாக இருக்கிறது.

இந்தச் செயல்முறைக்கு, நோயாளியின் தலைமுடியை மழித்து, அவரது தலையில் ஒரு சட்டம் பொருத்தப்படும். இது MRI கருவியில் அவரது தலையை அசையாமல் பொருத்தும்.

MRI டேபிளில் நோயாளி படுக்க வைக்கப்பட்டவுடன், குளிர்ந்த நீர் சுழலும் ஒரு சன்னமான தட்டையான கருவி அவரது தலையில் பொருத்தப்படுகிறது. இது உச்சந்தலையை குளிர்விக்கவும், அல்ட்ராசவுண்ட் சருமத்தை அதிக வெப்பமாக்குவதையும் தடுக்கும்.

சிகிச்சை பெறும் நபர் சிகிச்சையின் போது விழித்திருப்பார். நிபுணர்களுடன் ஒத்துழைப்பார்.

இந்த அல்ட்ராசவுண்ட், மூளையில் செயலிழப்புக்கு உள்ளான நரம்பணுக்கள் இருக்கும் பகுதியைக் குறிவைத்து அவற்றை அகற்றுகின்றன. அல்ட்ராசவுண்ட் வெளியிடும் உயர் ஆற்றலை வெப்பமாக மாறுகிறது. இலக்கு வைக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்களை சூடாக்குகிறது. அவற்றை அழிக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, நடுக்கம் படிப்படியாக மறைகிறது. இது நாம் சரியான இடத்தை இலக்காகக் கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

நடுக்கம் பெரும்பான்மையாக நிற்கும் அளவுக்கு சேதமான நரம்பணுக்களை அகற்ற வேண்டும். அந்த அளவுக்கு வெப்பநிலையை அதிகரிக்கப்படுகிறது.

இந்தச் சிகிச்சையின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று நடுக்கம் உடனடியாக நிற்கிறது.

சிகிச்சைக்கு முன்னரே நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் HIFU சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டுக்குச் செல்லலாம்.

எந்தவொரு சிகிச்சையையும் போலவே இதிலும் சில பக்க விளைவுகள் தோன்றக்கூடும் என்பது உண்மைதான். சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சிறு வீக்கம் தோன்றக்கூடும். இது சிறிது நேரத்திற்குப் பிறகு சரியாகிவிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.