;
Athirady Tamil News

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் ஆர்வம்: மோடி வரவேற்பு

0

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது சமூக வலைத்தளத்தில்,

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வெற்றிகரமான முடிவு கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் கோரிக்கையை வரவேற்ற பிரதமர் மோடி,

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். இந்தியா – அமெரிக்க உறவின் வரம்பற்ற திறனைத் வளர்ப்பதற்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.

இந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்ப்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது மட்டுமின்றி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரையில் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் டிரம்ப் கூறினார். இதனையயடுத்து, ரஷியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த நிலையில்தான், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.