;
Athirady Tamil News

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.!!

0

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட
மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட
மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில்,

வடக்கு கிழக்கிலே ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
வடகிழக்கிலே 39 ஊடகவியலாளர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோல ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. கணிசமான ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். இந்த நேரம் வரை ஊடகத் துறை என்பது ஒரு நெருக்கடியான துறையாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் தான் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பரீட்சயமாக இந்த தாக்குதல்கள் காணப்பட்டாலும் கொழும்பில் அது மீண்டும் எதிரொலிக்கிறது.

இந்த நிலையில் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான காணாமலாக்கல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்ற செயற்பாடுகளை நாங்கள் எவ்வாறு கண்டித்தோமோ தற்பொழுது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.

அந்தவகையில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் . தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து மட்ட பிரச்சனைகளிலும் எமது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது.

அந்த வகையில் இச்செயற்பாடுகளின் போது ஊடகங்களினுடைய பங்களிப்பும் எமது கலைப்பீட மாணவர் ஒன்றியத்தோடு பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது.
ஆகவே இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோ அச்சுறுத்தப்படுவதோ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அதனை அரச நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.