;
Athirady Tamil News

கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைப்பு!!

0

இலங்கையில் கல்வி மேம்பாடு, விரிவாக்கம் மற்றும் நவீன மயப்படுத்தலுக்கான பரிந்துரைகளுக்கென முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கே. ஆர். பத்மப்பிரிய இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜக்‌ஷ, அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்பரைக்கமைவாக ஜனாதிபதிக்குண்டான அதிகாரத்தின் படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி, 2169/2 ஆம் இலக்க விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபித்தார்.

ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவாக்கல் நடவடிக்கைகள் மற்றும் கல்வியை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு வழங்குவதும், காலத்துக்குக்காலம் கல்வி முன்னேற்றம் பற்றி அறிக்கைகளை வழங்குவதும் இந்த ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கையின் மூத்த துறைசார் நிபுணர்கள், கல்வியியலாளர்கள், அனைத்துப் பல்கலைக் கழகங்களினது துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் உட்பட 31 பேர் ஸதாபக உறுப்பினர்களாக நியமக்கப்பட்டிருந்தனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து இந்த ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக 27.07.2022 ஆம் திகதியக் கடிதம் மூலம் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி நடவடிக்கைகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறப்பிட்டுள்ளார்.

இதேவேளை –

ஆட்சி மாற்றத்தின் பின், முன்னாள் ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்ட கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள் மற்றும் ஆணைக் குழுக்களின் உயர் பதவிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று அரச உயர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.