;
Athirady Tamil News

எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!!

0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் உள்ளனர் என எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ எங்கள் பக்கம் தான் அ.தி.முக.வினர் உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக அவர்கள் சட்ட ரீதியாகவும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு புதிய இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போட்டி போட்டிக்கொண்டு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய நிர்வாகிகள் பெயர்களை அறிவித்தனர். இப்படி அ.தி.மு.க.வினர் இரு அணிகளாக செயல்படுவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் புதிதாக வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? இல்லையா என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது குறித்தும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் குறித்தும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.