சாதிகளின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வது வெட்கக்கேடானது: தேவகவுடா கடும் தாக்கு..!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/10/1783326-deve-gowda-750x430.jpg)
சாம்ராஜ்நகருக்கு நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சித்தராமையா ஒரு தலை கணம் பிடித்த அரசியல்வாதி.
முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளிவிட்டு தான் முதல்-மந்திரி அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என்று சித்தராமையா கணக்கு போட்டுள்ளார். அவர் தான் மற்றவர்களுக்கு தலைவலியாக இருக்கிறார். சாதிகளின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வது வெட்கக்கேடானது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை.
அவர் எந்த சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அவர் இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தும்படி ஒவ்வொரு சமுதாயத்தினரையும் ஊக்குவித்து வருகிறார். இடஒதுக்கீடு பற்றி சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ?, அதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு செய்து வருகிறது. அரசியல் ஆக்கவில்லை ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார். இது கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா மன்னிப்பு கேட்கும் வரை நான் ஓய மாட்டேன். இதை நான் அரசியல் ஆக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.