சிகரெட் மீதான வரியை ஏன் அதிகரிக்கவில்லை!!
அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க வில்லை என்று என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான சந்திம வீரகொடி கேள்வியெழுப்பினார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களையும் உள்ளடக்கவில்லை.
வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டுமானால் தேசிய வளங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.
தேசிய வளங்களை தனியார் மயப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அரசு பொறுப்பேற்க வேண்டும். அரச வருமானத்தை 63 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ளும் அரசின் இலக்கு வரி அதிகரிப்பை மாத்திரம் மையப்படுத்தியதாக காணப்படுகிறது.
வரி அதிகரிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரி அறவிட்டால் நடுத்தர மக்கள் மீது சுமை சுமத்த வேண்டிய தேவை ஏற்படாது” என்றார்.