;
Athirady Tamil News

தாக்குதலை தீவிரப்படுத்தியது மொஸ்கோ : திணறும் உக்ரைன் !!

0

உக்ரைனின் குபியன்ஸ்க் அருகே வடகிழக்கு போர்முனையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் தீவிரத்தன்மை காரணமாக பொதுமக்களை குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனின் குபியன்ஸ்க் நகரின் மீதான தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு இராணுவ படைகளின் செய்தி தொடர்பாளர் செர்ஜி செரேவதி தெரிவிக்கையில், ”ரஷ்ய தரப்புக்கள் தற்போது அதன் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன எனவும் இதன் காரணமாக , குபியன்ஸ்க் நகரை அவர்கள் முழுமையாக கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.” எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தின் குபியன்ஸ்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் மீளவும் ரஷ்ய படைகளிடமிருந்து கைப்பற்றி கொண்டன.

இருந்தபோதிலும் , தற்போது மீண்டும் ரஷ்ய தரப்புக்கள் குபியன்ஸ்க் நகரை கைப்பற்றுவதற்கான தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளபோதிலும் , குறித்த தாக்குதல் தொடர்பான எந்த ஒரு உத்தியோகபூர்வ தகவலையும் உக்ரைன் தரப்பு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.