;
Athirady Tamil News

டேங்கர் லாரி மீது 230 கிலோ மீட்டர் வேகத்தில் மோதிய ஆடம்பர கார்- 2 பேர் பலி!!

0

புதுடெல்லியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் விரைவு சாலையில் ஆடம்பர ரக ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் ஓட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கார் அரியானாவில் நூஹ் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதி விபத்தில் சிக்கியது. இதனால் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர விபத்தில் லாரி டிரைவரான ராம்பிரீத் மற்றும் அவரது உதவியாளரான குல்தீப் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஆடம்பர காரில் இருந்த சண்டிகரை சேர்ந்த தஸ்பீர், திவ்யா மற்றும் நிகாஷ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். ரூ.10 கோடி மதிப்பிலான காரின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. காரை ஓட்டி வந்தவர்கள் அதிவேகமாக இயக்கியதாகவும், சாலையின் வலது மற்றும் இடது என 2 பக்கங்களிலும் வளைத்து ஓட்டியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.

விபத்து குறித்து நூஹ் போலீசார் கூறுகையில், டேங்கரில் இருந்தவர்கள் வழக்கமாக இந்த வழித்தடத்தில் செல்லக்கூடியவர்கள். விபத்து ஏற்பட்ட போது இருவாகனங்களும் டெல்லியில் இருந்து வந்து கொண்டு இருந்தன. கார் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் குர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.