;
Athirady Tamil News

JR இன் கொள்கைகளை பின்பற்றி இருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு!!

0

மறைந்த ஜே.ஆர் ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இம்மாதம் (17) ஆம் திகதி நினைவு கூரப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தின நிகழ்வையொட்டி விடுத்துள்ள விசேட செய்தியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 78ஆவது அமர்வில் பங்கேற்க அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே, ஜே.ஆர் ஜயவர்தனவின் ஜன்ம தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார்.

கௌரவ ஜனாதிபதியின் உரையை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், பீ. மும்முல்லகே நிகழ்வில் வாசித்தார்.

ஜே.ஆர் ஜயவர்தன இந்நாட்டில் சமூக பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். அவர் 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கிக் கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும்.

நாட்டில், ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் அவரது கொள்கை பற்றிய புரிதல் இன்மை காரணமாக, அவரது சமூக பொருளாதார கொள்கைகளின் பலன்களை முழுமையாக அடைய முடியாமல் போனது.

எமது வலயத்தின் இந்தியா , சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகள் ஜே. ஆர் ஜயவர்தனவின் கொள்கைகளையே பின்பற்றின. அந்த நாடுகள் காலத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றன.

1938 களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலுக்கு பிரவேசித்த அவர், 1946 களில் ஐக்கிய தேசிய கட்சியை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது கெபினட் அமைச்சராக தெரிவானதோடு, டட்லி சேனநாயக்கவுக்கு பின்னர் 1973 களில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

1977 தேர்தலில் இலங்கையின் பிரதமரான ஜே. ஆர். ஜயவர்தன அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார். அணிசேரா அமைப்பின் ஆறாவது பொதுச் செயலாளராக அவர் தனது நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் மகத்தானவை. அதனை நினைவுகூருவது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவிக்கையில்,கட்சி சார்பற்ற நபராக இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்தார். அரச நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார்.இதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதே அவரது நோக்கமாக இருந்தது. இந்தக் கூட்டு முயற்சிகளால்தான் இன்று சீனா பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது.

ஜே.ஆர்.ஜயவர்தன ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவை மாற்றமாட்டார். அதை மாற்றினால், அது மக்கள் நல ஆட்சியை உருவாக்க மட்டுமே செய்யப்பட்டது. அவருடைய ஆட்சியின் போது அவருடன் ஒரு நல்ல இளைஞர் கூட்டம் இருந்தது. இளைஞர்களுக்கு வாய்ப்பையும் அதிகாரத்தையும் கொடுத்தார். தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன ஒரு சிறந்த முன்மாதிரி என்றார்.

ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.

இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தினால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு நாம் பூரண ஆதரவளிக்கிறோம். எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் கருணாசேன கொடித்துவக்கு, ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன்களான ஏ.ருக்சான் ஜயவர்தன, அம்ரிக் ஜயவர்தன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்.ஏ.பி. தயாரத்ன, ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் யு. ஜி. புஸ்வேவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன நிலைய உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.