;
Athirady Tamil News

முதலாவது MICE Expo யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

0

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo ஆனது நேற்று  முதல் 2023 டிசம்பர் 03 வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Jaffna MICE Expoவின் தொடக்க விழாவானது நாளை வெள்ளிக்கிழமை(01)மு.ப. 9 மணிக்கு நோர்த் கேட் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக சுற்றுலாத்துறை மற்றும் காணிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும், கௌரவ அதிதியாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்சும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விசேடமாகத் தென்னிந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வட மாகாணத்தை உகந்த MICE சுற்றுலாத் தளமாக விளம்பரப்படுத்துவதை இந்நிகழ்ச்சி நோக்காகக் கொண்டுள்ளது.

கடல் மற்றும் வான்வழிசார் தென்னிந்திய இணைப்பு நிலையூடாக இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கு யாழ்ப்பாணம் மிகப் பொருத்தமானதொரு நுழைவாயிலாகக் காணப்படும்.

வணிக மன்றங்கள், B2B நிகழ்வுகள், வலையமைப்புசார் அமர்வுகள், விசேட இராப் போசன விருந்துபசாரம் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பரிச்சயப்படுத்துவதற்கான சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஊடாடும் தளமாக யாழ்ப்பாண MICE Expo காணப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், மூன்று நாள் MICE Expo 2023 நிகழ்ச்சியானது வட மாகாணத்தை வணிக நிகழ்வுகள், சந்திப்புகள்,ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்த தளமாகக் காட்சிப்படுத்தும்.

தெரிவு செய்யப்பட்ட 40க்கும் அதிகமான வாங்குநர்கள் மற்றும் 5 ஊடகவியலாளர்கள் வருகை தரவுள்ளனர்.

நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் வாங்குநர்களை வரவேற்பதற்குத் தேவையான சகல வசதிகளையும் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தென்னிந்தியாவிலிருந்து வருகைதரவுள்ள இந்தப் பிரதிநிதிகள் குழுவானது தென்னிந்திய MICE அமைப்பு (SIMA), இந்தியப் பயண முகவர்கள் அமைப்பு (TAAI), இந்தியப் பயண முகவர்கள் சம்மேளனம் (TAFI), இந்தியத் தொழில்முனைவோர் முகவர்கள் அமைப்பு (ETAA) மற்றும் தமிழ்நாடு டிரவல் மார்ட் சங்கம் (TTMS)ஆகிய அமைப்புகளின் பிராந்தியத் தலைவர்களைக் கொண்டிருக்கும்.

வட மாகாண சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களை அதிகபட்சமாக வெளிப்படுத்திக்கொள்வதற்கு யாழ்ப்பாண MICE Expo தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய வாங்குநர்கள் மற்றும் உள்நாட்டு வாங்குநர்களை இலக்கு வைத்து ஒன்றுக்கு இரண்டு அணுகுமுறை கடைபிடிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியானது உள்ளுர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச வாங்குநர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.