வாகன விபத்தொன்றில் பாடசாலை மாணவன் பலி
மோட்டார் சைக்கிளொன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய – விருதோட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விருதோடை முஸ்லிம் தேவாலயத்திற்கு அருகாமையில் வலப்புறம் உள்ள பக்க வீதியில் லொறி திரும்ப முற்பட்ட போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மதுரங்குளிய – விருதோடை பகுதியைச் சேர்ந்த கலீல் அஹமட் மெஹிதி என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, விபத்து தொடர்பில் மதுரங்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.