;
Athirady Tamil News

மத்தியப் பிரதேசம்: பூண்டு திருட்டை தடுக்க புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்

0

மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பூண்டின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுவதால் அதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியிலும் அவர்கள் துயரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் வயல்வெளியில் இருந்து பூண்டு திருடு போவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வில் இருந்து பூண்டு பயிரை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். அதாவது பூண்டு பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம், பத்னூர் கிராமத்தில் வசிக்கும் பூண்டு விவசாயி ராகுல் தேஷ்முக் கூறியதாவது, அண்மையில் எனது வயலில் இருந்து 8 முதல் 10 கிலோ பூண்டுகளை திருடி போலீசாரிடம் ஒருவர் சிக்கினான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் எனது வயலை சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாத்து வருகிறேன். நான் 13 ஏக்கர் நிலத்தில் பூண்டு பயிரிட்டுள்ளேன். அதற்காக மொத்தம் ரூ. 25 லட்சம் செலவு செய்தேன். இதுவரை ரூ. 1 கோடி ரூபாய்க்கு பூண்டு விற்பனை செய்துள்ளேன். மேலும் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிரைக் கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

பத்னூரில் மற்றொரு பூண்டு விவசாயி பவன் சௌத்ரி, எனது வயலைக் கண்காணிக்க மூன்று சிசிடிவி கேமராக்களை நிறுவினேன். இரண்டு கேமராக்கள் என்னுடையது, ஒரு கேமரா வாடகை. எனது வயல்களில் இருந்து பூண்டுகள் திருடப்பட்டதால் இந்த கேமராக்களை நிறுவ வேண்டியிருந்தது இவ்வாறு அவர் கூறினார். 4 ஏக்கர் பூண்டு பயிரில் ரூ. 4 லட்சம் செலவு செய்து 6 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.