;
Athirady Tamil News

யாழில். மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை

0

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அதனை அடுத்து மாணவிகளை யாழ்,போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது.

அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் அருட்சகோதரியை கைது செய்து , ஊர்காவற்றுறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போது , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் , அருட்சகோதரியை 50 ஆயிரம் ரூபாய் காசு பிணை, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , மாணவ விடுதிக்கு அருட்சகோதரி செல்ல கூடாது எனவும் , பாதிக்கப்பட்ட மாண்வர்களுடனோ , அவர்களின் பெற்றோர்களுடனோ தொடர்பு கொள்ள கூடாது எனவும் நிபந்தனையும் விதித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.