;
Athirady Tamil News

மக்களுக்கான ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா ? – வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி

0

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும் அரசியல்வாதி போல ஜனாதிபதியும் நடந்து கொண்டுள்ளமை எமக்கு வேதனை அளிக்கிறது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளுக்காக இன்றைய தினம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் கொண்டிருந்தார்.

அதன் போது , யாழ் . மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்காக வருகை தந்த போது , மாவட்ட செயலகத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகள் , வேலை கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தங்களிடம் வருகை தந்து தமது கோரிக்கைகளை கேட்டறிந்து கொள்வர் எனும் நம்பிக்கையில் பட்டதாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காவல் இருந்தனர்.

கூட்டம் நிறைவடைந்ததும் , மாவட்ட செயலகத்தில் இருந்து ஜனாதிபதி மாற்று பாதை ஒன்றின் ஊடாக சென்று இருந்தார்.

ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கும் போது ,

நாம் கேட்பது எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமா ? எத்தனை பேருக்கு எப்ப வேலைவாய்ப்பினை வழங்குவீர்கள் என்றே .. ஆனால் இந்த அரசாங்கம் எமக்கு இதுவரையில் எந்த பதில் வழங்கவில்லை

மக்கள் விரும்பும் ஜனாதிபதி என்றால் எங்களை வந்து சந்தித்து இருக்க வேண்டும். நங்கள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து அமைதி வழியில் தான் போராடுகிறோம். எங்களுக்காக ஐந்து நிமிடங்களை ஒதுக்க முடியவில்லையா ?

எங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும் என்றே கோருகிறோம். பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு ஆசிரியரே நாலைந்து பாடங்களை கற்பிக்க வேண்டிய நிலைகளில் உள்ளனர். ஆனால் அந்த பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய எமக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம்.

எங்களை கண்டு அரசாங்கம் பயப்பட தேவையில்லை. நாங்கள் ஆயுதங்களுடன் போராடவில்லை. எமது போராட்டங்களுக்கு நீதிமன்ற தடையுத்தரவுகளை பெற தேவையில்லை. எமக்கு வேலை வாய்ப்புகளை வழங்குங்கள்

வடக்கு மாத்திரமல்ல கிழக்கிலும் வேலை கோரி பட்டதாரிகள் போராடி வருகின்றனர். வடக்கு கிழக்கு இளையோருக்கு அரசாங்கம் வேலை வாய்ப்புக்களை வழங்க முன் வர வேண்டும்.

அதேவேளை வடக்கு கிழக்கு மக்களிடமும் நாம் அன்பான கோரிக்கையை முன் வைக்கிறோம். எங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள் என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் தமக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க கோரி , ஜனாதிபதியை நேரில் சந்தித்து மகஜர் கொடுக்க முனைந்த போது , தம்மை ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்காது , ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரே தம்மிடம் மகஜரை வாங்கியதாகவும் , தாமும் வெளியே வரும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது கோரிக்கையை முன் வைக்க மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த போதிலும் , ஜனாதிபதி தம்மை சந்திக்காது சென்றார் என கவலை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.